1.8.10



"மக்களும் மரபுகளும்' என்ற நூலிலிருந்து

நரிக்குறவர்கள் அல்லது குருவிக்காரர்கள் என்று கூறப்படும் மக்கள், தென் மாநிலங்களை சேர்ந்த நாடோடி இனத்தவர். இவர்கள் மத்திய மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்ததாகக் கருதப்படுகின்றனர். தென் மாநிலங்களில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், தங்கள் தனித்தன்மையைக் காப்பதில் மிகவும் கவனமாக இருந்து வரும் இவர்கள், வேறு எந்த இனத்துடனும் கலந்து விடவில்லை!
நரிக்குறவர்கள் அனைவரும் இந்துக்கள். சமய உணர்ச்சி மிக்கவர்களான இவர்கள், தங்கள் கடவுள்களைத் தங்கள் இருப்பிடங்களிலேயே வணங்குகின்றனர்! அக்கடவுள்களின் உருவங்கள் ஒரு துணி மூட்டையில் வைக்கப்பட்டு, அத்துணி மூட்டை, சாமி மூட்டை என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஒரு சாமி மூட்டை உண்டு. குடும்பத் தலைவரால் மரியாதையாகவும், கவனமாகவும் அம்மூட்டை கவனிக்கப்படுகிறது. சாமி மூட்டையிலுள்ள துணியில், பலி கொடுக்கப்பட்ட விலங்கின் ரத்தத்தில் தோய்க்கப்பட்ட துணியும் அடங்கி இருக்கும். இவற்றை அவர்கள் பல பரம்பரையாக உள்ளதாகக் கூறிக் கொள்வர்.
ரத்தத்தில் தோய்க்கப்பட்ட பாவாடை ஒன்று, "சாமி பாவாடை' என்று பெயர் பெற்று அவர்களிடையே உள்ளது. நரிக்குறவப் பெண்கள் சாமி மூட்டையைத் தொடுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை; அத்துடன் ஒரு பிரிவைச் சார்ந்தவர்களின் சாமி மூட்டையை அடுத்த பிரிவைச் சார்ந்தவர்கள் தொடக் கூடாது. அடுத்தவர்களுக்கு அவர்கள் தங்கள் சாமி மூட்டையைப் பிரித்துக் காட்ட விரும்புவதில்லை.
வழிபாடு செய்யும் பொழுது, தன் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு சாமி மூட்டையைத் திறப்பான் குடும்பத் தலைவன். பின்னர், ரத்தம் தோய்ந்த பாவாடையை அணிந்து, வழிபாடு செய்வான்.
பூவும், குங்குமமும், மஞ்சள் தூளும் தேவதைகளின் முன் படைக்கப்படும். பலி கொடுத்த மிருகத்தின் ரத்தமும் தேவதைகளின் முன் படைக்கப்படும். தேவதைகளின் முன் நடனமாடியபடி, அந்த ரத்தத்தில் புரள்வான் குடும்பத்தின் தலைவன்.
ஒரு குடும்பத்தில் மகன் மணம் புரிந்து கொண்டால், தகப்பனின் சாமி மூட்டையில் ஒரு பகுதி அவனுக்குக் கொடுக்கப்படும். குடும்பத்தில் மூத்த மகன் தந்தையினுடைய சாமி மூட்டைக்கு வாரிசாகக் கருதப்படுகிறான். எனவே, அவனது சாமி மூட்டையில் உள்ள ரத்தம் தோய்ந்த துணி, ஏழு அல்லது எட்டுத் தலைமுறைகள் கடந்த மிகப் பழைய துணியாக இருக்கும். எப்பொழுதெல்லாம் பூஜை நடத்துகின்றனரோ, அப்பொழுதெல்லாம் உறவினர்களையும், கோத்திரக்காரர்களையும் (தந்தை வழி உறவினர்கள்) அழைத்து, அவர்களுக்கு தலைக்கு ஐந்து ரூபாயும், சம்பந்திகளுக்கு இரண்டு ரூபாயும் அன்பளிப்பாகக் கொடுப்பர்.

நன்றி - தினமலர்

24.2.10

23.2.10